'தோ..வந்துட்டேன்' என்று எப்போதோ பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்திருக்க வேண்டியது. என்ன செய்ய, என்னதான் எழுதுவதில் ஆர்வம் இருந்தாலும் செய்யும் தொழிலுக்கும் எழுத்துக்கும் இடைவெளி அதிகமாகும்போது அடிக்கடி எழுதுவதென்பது எட்டாக்கனியாகின்றது. அதனாலேயே இப்படி ஒரு வலைப்பூவை தொடங்கும் ஆர்வத்தை , தொடங்கிய பிறகு அடிக்கடி எழுத முடியுமா? என்ற கேள்வியே அடிக்கடி விழுங்கிவிட்டது. ஆனாலும் அவ்வப்போது எழுதியவற்றை Facebook இல் பதிவிட்டிருந்தேன். உங்களில் சிலர் அவற்றை வாசித்தும் இருக்கலாம்.
ஆனால் இப்போதோ ஏதோ ஒரு உந்துதல், எப்படியும் வாரத்துக்கு ஒரு முறையாவது எழுதி உங்கள் உயிரை வாங்குவது....இல்லையில்லை, மனதை வாங்குவது என்று இதோ என்னையும் களத்தில் இறக்கிவிட்டது. 'கெளம்பிட்டாய்யா இன்னொருத்தன்' என்று நீங்கள் புலம்புவது கேட்காமலில்லை. கவலப்படாதிங்கப்பா...பிரயோசனமா இருக்குமா, இல்லையா? யாமறியோம். ஆனா கொஞ்சமாவது சுவாரஷ்யமா இருக்கும்னு நம்புறேன்.
அதுசரி அது என்ன 'புதுமை விரும்பிகளுக்கு' ன்னு பில்ட்-அப் எல்லாம் பலமா இருக்கேன்னு பாக்கிறீங்களா? உண்மை தான். நம்மில் யார் புதுமை விரும்பிகளாக இல்லாதிருக்க முடியும்? எல்லோரும் ஏதோ ஒன்றில் தெரிந்தோ, தெரியாமலோ புதுமையை வரவேற்கத்தானே செய்கின்றோம். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒரு நாள் போட்டிகளுக்கு குதித்தோம். இப்போது 20-20 (இதில் 'Cheerleaders' என்ற புதுமை வேறுகதை). Windows XPஇலிருந்து Windows Vista விற்கு தாவினோம் . இப்போதோ Windows 7. இப்படி எத்தனை, எத்தனையோ. இவ்வளவு ஏன், புதுமையை விரும்பி தானே குரங்கிலிருந்து தொடங்கி இன்று ஒரு ஒபாமாவாக, டென்டுல்கராக, கமலஹாசனாக, நீங்களாக, நானாக வந்து நிற்கின்றோம். எனவே நான் குறிப்பிட்டுள்ள புதுமை விரும்பிகள் வேறு யாருமல்ல, நான், நீங்கள், நாமனைவருமே (அப்பாடா...!)!
கடைசியாக, 'Well begin is half done' என்பார்கள். அப்படி ஒரு நல்ல தொடக்கத்தை தந்துள்ளேன் என்ற நம்பிக்கையுடனும், உங்கள் மேலான பின்னூட்டல்கள் அடியேனின் பேனையை மீள் நிரப்பும் என்ற எதிர்ப்பார்ப்புடனும், அடுத்த பதிவு வரும் வரை - Bi.
வியாழன், அக்டோபர் 29, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)