வெள்ளி, மார்ச் 19, 2010

மாத்தி யோசி! -1

1
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்'
மகாகவி பாரதி பாடியது. எனக்கும் அவ்வாறே! (இவனுக்கு வேற எத்தன மொழி தெரிஞ்சிருக்கப்போகுதுனு நீங்க கேக்குறது விளங்குது . அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா..கண்டுக்கப்படாது! )

அதிலும் தமிழிலக்கணத்தில் 'சிலேடை' எனக்கு மிகவும் பிடித்தவொன்று. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரே சொல், பல பொருள். ஆங்கிலத்தில் 'PUN' (Paranomasia) என்பார்கள். இந்த சிலேடை, சினிமாப்பாடல்களில் உரிய‌ இடத்தில்  வரும்போது....குழல், யாழ், ஏன் மழலை மொழிக் கூட‌ தோற்றுப் போய்விடும். அவ்வளவு இனிமையாக இருக்கும். அதிலும் கவிப்பேரரசு வைரமுத்து, கவியரசு கண்ணதாசன், கவி மார்க்கண்டேயர் வாலி போன்றோர் சிலேடைகளை பாடல்களில் புகுத்தும் விதம்..ஆஹா...தமிழ் தமிழ் தான், கவிஞன் கவிஞன் தான்!

முதலில் கண்ணதாசன். இவர்  'வீர அபிமன்யு' என்ற திரைப்படத்தில் 'பார்த்தேன் சிரித்தேன்' என்ற காதல் பாடலில் ஒரு இடத்தில்
'அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்' 
என சிலேடையில் சிலிர்க்க வைத்திருப்பார். இதில் ஒன்று மலை+தேன் (மலைப்பிரதேசத்திலிருந்து எடுக்கப்பட்ட சுவையான தேன்) மற்றையது ஆச்சர்யத்தில் மலைத்துப்போவது. மிகவும் எளிதான சிலேடை. இது மட்டுமில்லாது இந்தப்பாடல் முழுவதுமே கண்ணதாசன் ஒரு த‌மிழ் ஆட்சியே நடத்தியிருப்பார். அதுப்பற்றி மட்டுமே ஒரு பதிவு எழுதலாம்.

அடுத்து வாலி, மூன்று தலைமுறையாக சினிமாப்பாடல்களில் தனது ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர். இவர் ச‌மீபத்தில் 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தின் 'எல்லாப் புகழும்..' என்ற பாடலில்
'எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே'  
என சற்று வித்தியாசமாக வார்த்தையையும் தாண்டி, ஒரு வசனத்தையே (வேர் + வைக்கும்) சிலேடையாக‌ புகுத்தி அசத்தியிருப்பார். ஆனால் இந்தப்படம் விஜயின் வெற்றிக்கு வேர் வைக்காமல் போனது வேற கதை.

இவை என்னதான் சிறப்பாக‌ இருந்தாலும் எனக்கென்னவோ சிலேடை என்ற‌வுடனே ஞாபகத்திற்கு வருவது வைரமுத்துவின் 'செவ்வாய்' தான். அமர்க்கள‌ம் திரைப்படத்தின்  'மேகங்கள் என்னைத்தொட்டு..' என்ற பாடலில் வரும்
'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தின‌ந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும், உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன், இதை அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?' 
என்ற வரிகளில் சிலேடையின் சிகரம் தொட்டிருப்பார். இதில் முதலாவது செவ்வாய்‍  செவ்வாய்க்கிரகம், அடுத்தது செவ் வாய் (சிவந்த வாய்). அந்த வாய் உதிரப்போகும் வார்த்தையில் தான் அவன் உயிர் உள்ளது என்ற அர்த்தத்தில் வரும் இந்த சிலேடை வைரமுத்துவின் தமிழ் ஆளுமைக்கு ஒரு சோறு பதம்.

இந்த  சிலேடைகள் தான் நான் மிகவும் ரசித்தவை. இவை தவிரவும் நிறைய இருக்கின்றன, இருக்கலாம். சமீபத்தில் கூட‌  'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கவிதாயினி தாமரை
'ஓமணப்பெண்ணே, ஓ  மணப்பெண்ணே' 
என   சிலேடையை இலேசாக தொட்டிருப்பார். முதல் ஓமணப்பெண்‍ ‍- மலையாள‌ம், அடுத்தது 'ஓ + மணப்பெண்'(கல்யாணப்பெண்).
('ஓ மனப்பெண்ணே' என்றும் வருகிறது)

பாடல்கள் மட்டுமல்ல, திரைப்பட பெயர்களில் கூட‌ சிலேடைகள் இருக்கின்றன‌. உதாரணமாக‌
'திருடா திருடா'. 

சேர்த்தெழுதினால் 'திருடாதிருடா' அதாவது 'திருடாது + இருடா'.
அதேப்போல் 'திருடா திருடி'‍‍ ‍- ‍‍திருடாது + இருடி.

இதுப்போல்  இன்னமும் நிறையவே இருக்கின்றன‍‍‍- மாத்தி யோசிக்க!

அவை தொடர்ந்து வரும்.....

அதுவரை நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிலேடைகளை மனக்கண்களில் ஓட்டிடுங்கள். அப்படியே இங்கே எனக்கும் ஒரு ஓட்டிடுங்கள்‍.(ஓட்டு+இடுங்கள்)
(ஷ்ஷப்பா...இந்த  ஒரு ஓட்ட‌க்கேக்க‌ எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு....அவ்...வூ)






திங்கள், மார்ச் 08, 2010

அவளுக்கும் அமுதென்று பேர்!

6
பூங்காவின் மடியில் பூவை அவள்.
விடிந்திருந்தது, ஆம் அவள் விழித்திறந்திருந்தாள்.
பூக்களின் மேல் பனித்துளிகள் தானே வழக்கம்; பனித்துளிகள் மேல் பூ அவள், புதுமை தான்!
கன்னியவள் கரங்களின் அரவணைப்பில் புதுக்கவிதையொன்று.
ஆஹா, புதிர்க்கவிதை கைகளில் புதுக்கவிதை!
அவள் விரல்கள் கவிதைத்தாளை வருட, விழிகள் கவிதையை வருடத்தொடங்கின..
அவள் கவிதை வாசிக்க...அல்ல, வடிக்கத்தொடங்கியிருந்தாள். 

அவள் விழிகள் விரிந்தன‌, கூடவே கவிதையின் விழிகளும்!
கன்னியவள் இமை உய‌ர, கவிதை
த் தலை குனிந்தது.
அவள் இதழ‌சைவின்  'ஹைக்கூ'வில் புதுக்கவிதை புழுங்கல் கவிதையானது.
எதுகை நயமும், மோனை நயமும் அவளது விழி அபிநயத்தில் சிக்கித்தவிக்க, கவிதையின் எண்ணம் அவள் கன்னத்து வண்ணத்தில் கரைந்துப் போயிற்று.
அவளது உள்ள‌ங்கை உவமைகளை ஊமையாக்கியது.
சொல்லும், பொருளும் அவள் விரல்களின் ஸ்பரிஷத்தில் சிலிர்த்துப் போயிருக்க, 

கவிதையின் தலைப்பு ஓடிச்சென்று அவள் நெற்றிப்பொட்டின் பின்னால் ஒளிந்துக்கொண்டது.
சரிந்து விழுந்த அவளது முடிக்கீற்றில் கவிதையின் கரு தற்கொலை செய்து கொள்ள,
முதலிடக் கவிதை அவள் முன்னழகில் மூர்ச்சையானது.
வெட்கித்தலை குனிந்து, அவள் விரல் விட்டு விடைப் பெற்ற கவிதை சொல்லாமல் சொல்லிற்று,
அவள் விழி பார்த்து
'கவி மொழியால் மட்டுமல்ல, (உன்) விழியாலும் எழுதலாமென்று'!
பூங்காவிற்கு புரியவில்லை,
'கவிதை வாசித்தது அவளா, இல்லை
கவிதை வாசித்தது அவளையா' என்று!

Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner