ஞாயிறு, ஜூலை 25, 2010

முத்தையா முரளிதரன் என்னும் கனவான்!

2
Yeah Murali, your time is up!

முத்தையா முரளிதரன் ‍- கடந்த சில நாட்களாக இனம், மொழி, நாடு கடந்து  கிரிக்கட் ரசிகர்கள் அனைவரது உதடுகளிலும், உள்ளங்களில் நிறைந்த பெயர்! முரளி ஒரு மிகச்சிறந்த கிரிக்கட் வீரர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி! ஆனால அந்த ஒரு தகுதி மட்டும் அவரை இவ்வளவு பேரின் உள்ள‌ங்களிற்கு கொண்டுசேர்த்திருக்க முடியுமா என்பது ஐயமே!   உலக ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க திறமைவானாக இருந்தால் மட்டும் போதாது, கனவானாகவும் இருக்கவேண்டும்.

நான் 'கன‌வான்களின் விளையாட்டு' கிரிக்கட் இரசிகனாகிய‌ (1996 உலக‌க்கோப்பையின்) பின்னர் கிட்ட‌த்தட்ட கடந்த 15 வருடங்களில் பல போட்டிகளில் பல வீரர்களை இர‌சித்திருகினறேன். ஆனால் ஒருவரை மட்டுமே தொடந்து 15 வருடமாக ரசிக்கவெண்டுமென்றால் அவர் திறமையையும் மீறி இன்னபிற தகுதிகளும் இருக்கவேண்டும் என கருதுகின்றேன்.. அவை தான் மற்ற வீரர்களிடமிருந்து முரளியை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அவற்றில் முக்கியமானது, அவர் சக வீரர்களிடம் நடந்துக்கோள்ளும் விதம்! எனக்குத் தெரிந்து அவர் எந்த ஒருப் போட்டியிலும் எந்த ஒரு கட்டத்திலும் முக்கியமாக ஆட்டமிழக்கச் செய்தப்பின் எதிரணி வீரர்களை சீண்டியதோ அல்லது கடுப்பேத்தியதோ கிடையாது. மாறாக ஒரு வெள்ளந்திப்புன்னகையையும், குழ்ந்தைத்துள்ளலையுமே காணமுடியும். நேற்று வந்த சிறீஷாந்துகளும், முந்தா நாள் வந்த ஹர்பஜன் சிங்குகளும் செய்யும் அல‌ப்பரைகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில் முரளியின் குழந்தைத்துள்ளலை யார் தான் ரசிக்காமல் இருப்பார்?
ப‌ந்தில் சுழலையும் பார்க்கலாம், முகத்தில் மழ‌லையும் பார்க்கலாம்!

மைதானத்தில் மட்டுமல்ல, வெளியேயும் தன் அணி வீரர்களிடமும், சக அணிவீரரகளிடமும் நட்பு வளர்ப்பதில் அவருக்கு நிகர் அவரே தான்! இலங்கை அணியில் புதிதாக இணையும் இளம் வீரர்களை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது வெளியில் அழைத்துச்செல்வது அனேகமாக முரளியாகத்தானிருக்கும் எனவும், நண்பராக‌ மட்டுமல்ல ஆலோசகராக கூட‌ பல தடவைகள் அவராக முன்வந்து ஆலோசனை வழ‌ங்குவார் எனவும் தன் அணி வீரர்களிடம் மட்டுமல்ல, எதிரணி வீரர்களிடமும் அவரது நட்பு
சக வீரர்கள் பொறாமைப்படும் அள்விற்கு இருக்கும் எனவும் ச‌மீபத்தில் தொலைக்காட்சி உரையாடலொன்றில் சனத் கூறியிருந்தார். அப்படி ஒருவரின் இழப்பு இல‌ங்கை அணிக்கு மைதானத்திற்கு உள்ளே மட்டுமல்ல மைதானத்திற்கு வெளியேயும் ஈடு செய்ய முடியாதவொன்றாக இருக்கப்போகின்றது என்பது மட்டும் திண்ணம்! 
 கையும் பேசும், வாயும் பேசும்!

எந்தவொரு சாதனைக்கு பின்னும் ப‌ல சோதனைகளும் வேதனைகளும் இருக்கத்தான் செய்யும். முரளியும் இத‌ற்கு விதிவிலக்கல்ல.அவ்வாறான சோதனைக‌ள் முரளிக்கு ஒரு முறை அல்ல பல‌ முறை நடந்தேறியது நாம் அறிந்ததே. ப‌ந்தை எறிகின்றார் என்று 1995ஆம் ஆண்டு நடுவர் ட்ரல் ஹெயாரினாலும், தொடநது 1999 ஆம் ஆண்டு ரோஸ் எமர்சனாலும் குற்றம் சுமத்தப்பட்டார் (இதேப்போட்டியில் 303 என்ற வெற்றி இலக்கை இல‌ங்கை அடைந்தபோது வெற்றி ஓட்ட்த்தை பெற்றதும் முரளியே, அதே குழ்ந்தைத்துள்ளலோடு!).அது மட்டுமலலாது 2004ஆம் ஆண்டு அவரது துருப்புச்சீட்டு 'தூஷ்ரா' பந்தையும் கிரிக்கட் விதிகளுக்குட்பட்டது என நிரூபித்துக் காட்டவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.அப்போதெல்லாம் கூட ம‌ற்றவர்களைப்போல் வீணே வாய்ச்சவடால்களில் இற‌ங்காது அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு தனது பந்துவீச்சு விதிகளுக்குட்பட்டது தான் என நிரூபித்துக் காட்டினார். சமீபத்தில் கூட ரோஸ் எமர்சன் தன் 'திருவாய்' மலர்ந்து முரளி இந்த சாதனைகளுக்கு தகுதியானவர் அல்ல எனவும் அவரது பந்துவீச்சு முறையற்றது என்பதில் இன்னும் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அதற்கு பிற‌கும் கூட முரளி அவரைப் பற்றி கூறுகையில் 'அவர மேல் தனக்கு எந்த வித‌மான வருத்தமும் இல்லையென‌வும், அவர் வெறும் கண்ணில் (Naked Eye) பார்ப்பதால் அப்படி தோன்றுவது இயல்பு, அது அவரின் கடமை எனவும் கூறியிருந்தார்.  இது முரளியின் பெருந்தன்மைக்கு ஒரு சோறு பதம்!
மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை!

'டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு' என்ற முரளியின் திடீர் முடிவும் கூட காலம், நிலை அறிந்து எடுக்கப்பட்ட முடிவு என்பதில் எனக்கு துளியும் முர‌ண்பாடில்லை. இப்போதெல்லாம் பந்துவீச்சில் அதே பழைய முரளியை காணமுடிந்தாலும் களத்தடுப்பில் அந்த பழைய முரளியை காணமுடிவதில்லை. மனம் முரளியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் உடல் வயதிற்கு கட்டுப்பட்டுத் தானே ஆகவேண்டும். இது புரியாமல் சங்கக்காரவே சில போட்டிகளில் களத்தடுப்பின்போது முரளியை கடிந்துக்கொள்வதை நானே பார்த்திருக்கின்றேன். (இதுவும் முரளியின் இந்த திடீர் முடிவுக்கு நிச்சயம் ஒரு உந்துதலாக அமைந்திருக்கும்). முரளியை இப்போது தலையி(தோளி)ல் தூக்கிவைத்து கொண்டாடினாலும் சில போட்டிக‌ளின் தொடர்ச்சியான சறுக்கல், சமிந்த வாஸ், சனத்தைப் போல் முரளியையும் கழட்டிவிடப் பபட்டிருக்க‌கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இதை முரளியே அறிவார். அதனால் முரளியின் இந்த முடிவு நிச்சயம் ஒரு நல்ல முடிவு; காலம் அறிந்து எடுக்கப்பட்ட முடிவு. ஒரு நாள் போட்டிகளுக்குக்கூட 'போட்டிகளுக்கு என்னை தெரிவு செய்யத்தேவையில்லை, நானே போட்டிகளை தெரிவு செய்துக்கொள்ளுகின்றேன்' என்ற‌ மறைமுக செய்தியோடு முரளி எடுத்திருக்கும் அந்த முடிவுக்கு ஒரு சல்யூட்!  ஆனால் கடந்த‌ டெஸ்ட் தொடர்களின் வெற்றிகளில் முரளியின் பங்கும், அதை ஈடு செய்ய மென்டிஸ், சுராஜ் ரான்டிவ் போன்றோர் படவேண்டியிருக்கும் கஷ்டமும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எனக்கு இனி ஓய்வு, உனக்கு இனி வாழ்வு!

இறுதியாக‌ 800 விக்கெட்டுகளை தொட 8 விக்கெட்டுகளே மிச்சமிருந்த நிலையில் முரளி நினைத்திருந்தால் இந்தத் தொடர் முழுதும் விளையாடி அதை உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால் முதல் போட்டியிலேயே ஓய்வு என்ற முடிவை எடுத்திருந்தார் முத்தையா முரளிதரன்.  ஒன்று 8 விக்கட்டுகளையும் எப்படியும் எடுத்துவிடலாம் என்ற தன்ன‌ம்பிக்கை அல்லது 800 என்ற இலக்கத்தை துச்சமென நினைத்த அந்த மனம்‍‍ ஏதொவொன்றிற்காக‌ Hats off to you Murali!
நிறம் மாறிய பந்தும், நிறம் மாறாத புன்னகையும்!

முரளி இல்லாமல் இனி டெஸ்ட் போட்டிகளின் போது மைதானங்கள், இலங்கை அணியின் 'Dressing Room'  மட்டுமல்ல நமது தொலைக்காட்சி பெட்டிகளிலும் கூட அந்த வெறுமை தெரியத்தான் போகின்றது. ஆனால் ஒன்று, டெஸ்ட் போட்டிகளிலேனும் கள‌த்தடுப்பின்போது
'தலைவர்' சங்கக்கார முரளியை கடிந்துக்கொள்வதை கனத்த மனத்துடன் பார்க்கவேண்டியிருக்காது.

திங்கள், ஜூலை 19, 2010

மாத்தியோசி-2

3
'மாத்தியோசி-1' இல் திரைப்படங்களில் வந்த‌ சில சிலேடைகளை பற்றி எழுதியிருந்தேன். வரவேற்பும், பாராட்டுகளும் வந்து குவிந்தன. பின்னூட்டங்களை வாசித்து முடிக்கவே மூன்று நாள் முழுதாக முக்கவேண்டியிருந்தது. (மொத்தமா ரெண்டு ஓட்டு, ரெண்டு கமெண்ட்ஸ். அதுல ஒண்ணு நம்மளே போட்டுக்கிட்டது ......அஆங்க்). அதே உற்சாகத்திலேயே(....?) சூட்டோடு சூட்டாக மாத்தியோசி-2 ஐயும் எழுதி முடித்துமுடித்துவிட வேண்டுமென்று இதொ கிட்டத்தட்ட நான்கே மாதத்தில்
(அடங்கொய்யாலே...) மாத்தியோசி-2வும் ரெடி!

இந்தப்பதிவு மாத்தியோசிக்க வைக்கும் சில பழமொழிகளை ப‌ற்றியது. பழமொழிகள் - அனுபவங்களின் குழந்தை! அதுவும் ஒரே பழமொழி இருவேறு அனுபவத்தை த‌ந்தால் சொல்லவும் வேண்டுமா? அவ்வாறு அமைந்த சில பழ‌மொழிகளைப் பற்றியே இந்தப்பதிவு.

முதலாவதாக ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை தருமாறு வரும் ‌ பழமொழிகளில் ஒன்று.
'ஆறிலும் சாவு, நூறிலும் சாவு'
பொதுவான விளக்கம் ஆறு வயதிலும் சாவு வரலாம், நூறு வயதிலும் சாவு வரலாம். இது எல்லோரும் அறிந்தது. இதே பழமொழி
'ஆறிலும் சாவு, நூலிலும் சாவு' 
என சற்றே மருவி ஒலிக்கும்போது உணர்த்தும் அர்த்தம் வேறு (இதில் வரும் ஆறு‍ - ‍அருவி).

ஆனால் இவற்றை விட நான் அறிந்த இன்னொரு விளக்கம் மிக வித்தியாசமானது, சுவாரஷ்யமானதும் கூட‌‌. அது குருஷேத்திரப்போரில் கர்ணனின் நிலையோடு இப்பழமொழியை தொடர்புபடுத்தி பின்வருமாறு அமைகின்றது. கர்ணன்  குருஷேத்திரப்போரில் கௌரவர்கள்  (துரியோதணன் கோஷ்டி) 100 பேரோடு  இருந்தாலும் அவனை பஞ்சப்பாண்டவர்கள் போட்டுத்தாக்குவது உறுதி (அப்பயெல்லாம் நல்லவங்கதான் ஜெயிப்பாங்கலாம்...ம்ம்ம்). அல்லது பஞ்சப்பாண்டவர்கள் அணியில்  அறுவரோடு (கண்ணனோடு சேர்த்து) சேர்ந்தாலும் செஞ்சோற்றுக்கடன் மறந்தமைக்காக‌ அவனது மனசாட்சியே அவனை கொஞ்சம், கொஞ்சமாக கொன்றுவிடும். ஆக‌ 'ஆறிலும் சாவு, நூறிலும் சாவு'! (கொஞ்சம் இடித்தாலும்) மிக சுவாரஸ்யமான விளக்கம்!

அடுத்த பழமொழி அத்தனை பிரபலமானது அல்ல என நினைக்கின்றேன். அது
'சோழியன் குடுமி சும்மா ஆடாது'
என வரும். இது காரணமில்லாமல் காரியமில்லை என்ற அர்த்தத்தை தருகின்றது ('எலி ஏன் அம்மணமா ஓடுது?' என்ற உலகமகா கேள்வியின் புழக்கத்தால் இந்த பழமொழியின் புழக்கம் அவ்வளவாக இல்லை என நினைக்கிறேன்). ஆனால் இதன் உண்மையான வடிவம் இதுவல்ல எனவும், இது காலப்போக்கில் மருவி வந்த வடிவம் எனவும் எங்கள் ஆசிரியர் ஒருவர் கூறியதாக ஞாபகம். உண்மையான வடிவம்
'சோழியன் குடுமி சும்மாடு ஆகாது'!. 
இதில் வரும் சும்மாடு‍ - சுமை தூக்கும்போது அழுத்தாமலிருக்க தலைக்கு வைப்பது.(அதாங்க.. 'சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாடு இறக்கு'ன்னு 'என் ஆசை மச்சான்'ல நம்ம கேப்டன் பாடுவாரே..அதெ சும்மாடுதான்!)

இதைப்போல் இன்னும் பல இருக்கின்றன. அவை தொடர்ந்து வரும். (அடுத்தத‌யும் அரும்பாடுப்பட்டாவது நாலு மாசத்தில எழுதி முடிச்சிடணும் ;))

'மாத்தியோசி-1' இல் திரைப்படப் பெயர்களிலிருக்கும் சில சிலேடைகளை பற்றி குறிப்பிட்டிருந்தென். ஆனால் அவற்றையெல்லாம் அள்ளிச் சாப்பிடும் அள‌விற்கு தமிழ்த்திரைப்பட பெயரொன்றில் சிலேடை ஒன்று உள்ளது. அது 

'முள்ளும் மலரும்'!
'முள் + மலர்' என்பது ஒரு அர்த்தம். ஆனால் 'மலரும்' என்பதை செயலாக பார்க்கும்போது 'முள்ளும் கூட மலரும்' என்ற அர்த்தத்தில் ஒலிக்கின்றது. தலைப்பிலேயே ஒரு குட்டிக்கவிதை. இது அதுவாக அமைந்ததா அல்லது அறிந்தே வைக்கப்பட்டதா என்பது இயக்குனர் மகேந்திரனுக்கே வெளிச்சம்!

இறுதியாக....
எப்புடியெல்லாம் மாத்தி யோசிக்கிறாய்ங்க, அவ்வ்..!

'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.'                                                                                                   .

சனி, மே 22, 2010

கா(தல்) முதல் க(ண்ணீர்) வரை...!

5
உன் புன்னகை, உன் சிணுங்கல், உன் கோபம், உன் அமைதி, உன் விருப்பம், உன் வெறுப்பு, உன் காதோரத்து பரு, உன் உதட்டோரத்து மச்சம்........ அத்தனையும் எனக்கு அத்துப்படி. ஆனால் இன்னும் நம்பிக்கையில்லை என‌க்கு - என் முழுப்பெயர் தெரியும் உனக்கென்று!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன்னை நான் பார்க்கும்பொழுதுகளில் எல்லாம் உன் மேலாடையை சரி செய்துக்கொள்ளுகின்றாய். அப்படி பார்த்தால் நீ முதலில் ஆடை அணிய வேண்டியது உன் கண்களுக்குத்தான்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உன் பெயர் தாங்கிய கடதாசித் துண்டுகள் கூட என் சேமிப்பில் பத்திரமாக. அவற்றின் காதுகளுக்கு கேட்க வாய்ப்பில்லை‍ - உன் வீட்டு குப்பைத்தொட்டியில் கிழிந்து கிடக்கும் என் காதல் கடிதங்களின் கத‌றல்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நண்பர்கள் கேட்கின்றார்கள், காதலர் தினத்தன்று காதலி உன்னிடமிருந்து பெற்ற பரிசை. எப்படி காட்டிவிடுவது ‍- சிந்திவிட்ட கண்ணீர்த்துளிகளை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ஏமாறத்தான் முடிகின்றது,  ஏமாற்றுகின்றாய் நீ என்று தெரிந்திருந்தும்!
இறுதியாக‌ ஒன்றை மட்டும் உணர்த்திவிடு,
புரிந்துக்கொள்ள மறுக்கின்றாயா, இல்லை புரிந்துக்கொண்டு மறைக்கின்றாயா!

புதன், ஏப்ரல் 07, 2010

வேணாம், இந்த IPL வேணாம்..!

2
'பத்து மணிக்கு  படுத்து, ஆறு மணிக்கு எழும்பி' நல்லாத்தானேய்யா போய்க்கிட்டுருந்துச்சு! இப்ப பத்து பதினொன்னாகி ,பன்னிரண்டாகி.....கருமம் கனவுலயும் அனுஷ்காவுக்கும், த்ரிஷாவுக்கும் பதிலா இந்த ஃபோரும் சிக்ஸருமா வந்து கடுப்பேத்த‌‌....
வேணாம்,   தூக்கத்துக்கு ஆப்படிச்ச‌ இந்த IPL வேணாம்!

கோபி நாத்துக்கும், அல்கா அஜித்துகளுக்கும் ரிசர்வ் பண்ணி வச்சிருந்த அந்த 'நைன்' டூ 'லெவன' கொண்டுப்போயி  (மொங்கூசு) பெட்டுலயும் , சியர் லீடர்ஸ் இடுப்புலயும் அடகு வெச்சாச்சு. அம்போன்னு உக்காந்திருக்கிற அம்மா 'இவன் செனல்ல மாத்தமாட்டான்'னு எழும்பி போறப்ப‌ அந்த (மொங்கூசு) பெட்டயே புடுங்கி தலையில அடிச்சுக்கத் தோணும்.
அதனால‌....
வேணாம்,   அம்மாக்களுக்கு புடிக்காத இந்த IPL வேணாம்!


ஆறுமணிக்கு 'மெட்ச்சா பாக்குற மெட்ச்சு, எழும்படா மோனே'ன்னு அலறுற அலாரத்தோட‌ சேத்து நேத்து வெளையாடின ரெண்டு டீமையும் அசிங்க, அசிங்கமா திட்டிட்டு (தேங்ஸ் டூ ஹர்பஜன் சிங், சிறீசாந்த் ) கண்ண‌ லேசா மூடுனா ஆபிஸ் டிரான்ஸ்போர்ட்ட‌ விட்டுட்டு   ஆட்டோக்காரனுக்கு அழுகுற‌ 100 ரூவா நோட்டு பல்லக்காட்டி இழிக்க.....
வேணாம், 'ALARM CLOCK' அ சுக்கு நூறாக்குன இந்த IPL வேணாம்!

அடிச்சு புடிச்சு ஆபிஸ் வந்து சேந்து 'BOSS'க்கு 'குட் மோர்னிங்' வச்சா அடிவாங்கி அழுத சிறீசாந்த் கண‌க்கா செவந்துக்கெடந்த கண்ணப்பாத்து அவரு கேட்டது 'நைட்டு பார்ட்டியா?'ன்னு. அதனால..
வேணாம், எங்க 'BOSS' பாக்காத‌ இந்த IPL வேணாம்!


அதே எரிச்சலோட‌  'FACEBOOK' அ தெற‌ந்தா அவனவன் ரவி சாஸ்திரி கணக்கா நடந்த மெட்ச்ச ப‌த்தி ஆராச்சி ப‌ண்ணி வச்சிருக்க அதயும் மிச்சம் வைக்காம  இந்த எழவெடுத்த‌ கண்ணு துருவி, துருவி ஆராய‌.....
வேணாம்,  இந்த 'FACEBOOK IPL' வேணாம்!


கடைசியா எட்டுக்கே இவ்வளவு எழவாயிருக்கே, இன்னும் பத்து வந்துச்சுன்னா....
வேணாம், அடுத்த IPLலும்  வேணாம்!





வெள்ளி, மார்ச் 19, 2010

மாத்தி யோசி! -1

1
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்'
மகாகவி பாரதி பாடியது. எனக்கும் அவ்வாறே! (இவனுக்கு வேற எத்தன மொழி தெரிஞ்சிருக்கப்போகுதுனு நீங்க கேக்குறது விளங்குது . அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா..கண்டுக்கப்படாது! )

அதிலும் தமிழிலக்கணத்தில் 'சிலேடை' எனக்கு மிகவும் பிடித்தவொன்று. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரே சொல், பல பொருள். ஆங்கிலத்தில் 'PUN' (Paranomasia) என்பார்கள். இந்த சிலேடை, சினிமாப்பாடல்களில் உரிய‌ இடத்தில்  வரும்போது....குழல், யாழ், ஏன் மழலை மொழிக் கூட‌ தோற்றுப் போய்விடும். அவ்வளவு இனிமையாக இருக்கும். அதிலும் கவிப்பேரரசு வைரமுத்து, கவியரசு கண்ணதாசன், கவி மார்க்கண்டேயர் வாலி போன்றோர் சிலேடைகளை பாடல்களில் புகுத்தும் விதம்..ஆஹா...தமிழ் தமிழ் தான், கவிஞன் கவிஞன் தான்!

முதலில் கண்ணதாசன். இவர்  'வீர அபிமன்யு' என்ற திரைப்படத்தில் 'பார்த்தேன் சிரித்தேன்' என்ற காதல் பாடலில் ஒரு இடத்தில்
'அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்' 
என சிலேடையில் சிலிர்க்க வைத்திருப்பார். இதில் ஒன்று மலை+தேன் (மலைப்பிரதேசத்திலிருந்து எடுக்கப்பட்ட சுவையான தேன்) மற்றையது ஆச்சர்யத்தில் மலைத்துப்போவது. மிகவும் எளிதான சிலேடை. இது மட்டுமில்லாது இந்தப்பாடல் முழுவதுமே கண்ணதாசன் ஒரு த‌மிழ் ஆட்சியே நடத்தியிருப்பார். அதுப்பற்றி மட்டுமே ஒரு பதிவு எழுதலாம்.

அடுத்து வாலி, மூன்று தலைமுறையாக சினிமாப்பாடல்களில் தனது ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர். இவர் ச‌மீபத்தில் 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தின் 'எல்லாப் புகழும்..' என்ற பாடலில்
'எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே'  
என சற்று வித்தியாசமாக வார்த்தையையும் தாண்டி, ஒரு வசனத்தையே (வேர் + வைக்கும்) சிலேடையாக‌ புகுத்தி அசத்தியிருப்பார். ஆனால் இந்தப்படம் விஜயின் வெற்றிக்கு வேர் வைக்காமல் போனது வேற கதை.

இவை என்னதான் சிறப்பாக‌ இருந்தாலும் எனக்கென்னவோ சிலேடை என்ற‌வுடனே ஞாபகத்திற்கு வருவது வைரமுத்துவின் 'செவ்வாய்' தான். அமர்க்கள‌ம் திரைப்படத்தின்  'மேகங்கள் என்னைத்தொட்டு..' என்ற பாடலில் வரும்
'செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தின‌ந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும், உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன், இதை அறியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?' 
என்ற வரிகளில் சிலேடையின் சிகரம் தொட்டிருப்பார். இதில் முதலாவது செவ்வாய்‍  செவ்வாய்க்கிரகம், அடுத்தது செவ் வாய் (சிவந்த வாய்). அந்த வாய் உதிரப்போகும் வார்த்தையில் தான் அவன் உயிர் உள்ளது என்ற அர்த்தத்தில் வரும் இந்த சிலேடை வைரமுத்துவின் தமிழ் ஆளுமைக்கு ஒரு சோறு பதம்.

இந்த  சிலேடைகள் தான் நான் மிகவும் ரசித்தவை. இவை தவிரவும் நிறைய இருக்கின்றன, இருக்கலாம். சமீபத்தில் கூட‌  'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தில் கவிதாயினி தாமரை
'ஓமணப்பெண்ணே, ஓ  மணப்பெண்ணே' 
என   சிலேடையை இலேசாக தொட்டிருப்பார். முதல் ஓமணப்பெண்‍ ‍- மலையாள‌ம், அடுத்தது 'ஓ + மணப்பெண்'(கல்யாணப்பெண்).
('ஓ மனப்பெண்ணே' என்றும் வருகிறது)

பாடல்கள் மட்டுமல்ல, திரைப்பட பெயர்களில் கூட‌ சிலேடைகள் இருக்கின்றன‌. உதாரணமாக‌
'திருடா திருடா'. 

சேர்த்தெழுதினால் 'திருடாதிருடா' அதாவது 'திருடாது + இருடா'.
அதேப்போல் 'திருடா திருடி'‍‍ ‍- ‍‍திருடாது + இருடி.

இதுப்போல்  இன்னமும் நிறையவே இருக்கின்றன‍‍‍- மாத்தி யோசிக்க!

அவை தொடர்ந்து வரும்.....

அதுவரை நீங்களும் உங்களுக்கு தெரிந்த சிலேடைகளை மனக்கண்களில் ஓட்டிடுங்கள். அப்படியே இங்கே எனக்கும் ஒரு ஓட்டிடுங்கள்‍.(ஓட்டு+இடுங்கள்)
(ஷ்ஷப்பா...இந்த  ஒரு ஓட்ட‌க்கேக்க‌ எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு....அவ்...வூ)






திங்கள், மார்ச் 08, 2010

அவளுக்கும் அமுதென்று பேர்!

6
பூங்காவின் மடியில் பூவை அவள்.
விடிந்திருந்தது, ஆம் அவள் விழித்திறந்திருந்தாள்.
பூக்களின் மேல் பனித்துளிகள் தானே வழக்கம்; பனித்துளிகள் மேல் பூ அவள், புதுமை தான்!
கன்னியவள் கரங்களின் அரவணைப்பில் புதுக்கவிதையொன்று.
ஆஹா, புதிர்க்கவிதை கைகளில் புதுக்கவிதை!
அவள் விரல்கள் கவிதைத்தாளை வருட, விழிகள் கவிதையை வருடத்தொடங்கின..
அவள் கவிதை வாசிக்க...அல்ல, வடிக்கத்தொடங்கியிருந்தாள். 

அவள் விழிகள் விரிந்தன‌, கூடவே கவிதையின் விழிகளும்!
கன்னியவள் இமை உய‌ர, கவிதை
த் தலை குனிந்தது.
அவள் இதழ‌சைவின்  'ஹைக்கூ'வில் புதுக்கவிதை புழுங்கல் கவிதையானது.
எதுகை நயமும், மோனை நயமும் அவளது விழி அபிநயத்தில் சிக்கித்தவிக்க, கவிதையின் எண்ணம் அவள் கன்னத்து வண்ணத்தில் கரைந்துப் போயிற்று.
அவளது உள்ள‌ங்கை உவமைகளை ஊமையாக்கியது.
சொல்லும், பொருளும் அவள் விரல்களின் ஸ்பரிஷத்தில் சிலிர்த்துப் போயிருக்க, 

கவிதையின் தலைப்பு ஓடிச்சென்று அவள் நெற்றிப்பொட்டின் பின்னால் ஒளிந்துக்கொண்டது.
சரிந்து விழுந்த அவளது முடிக்கீற்றில் கவிதையின் கரு தற்கொலை செய்து கொள்ள,
முதலிடக் கவிதை அவள் முன்னழகில் மூர்ச்சையானது.
வெட்கித்தலை குனிந்து, அவள் விரல் விட்டு விடைப் பெற்ற கவிதை சொல்லாமல் சொல்லிற்று,
அவள் விழி பார்த்து
'கவி மொழியால் மட்டுமல்ல, (உன்) விழியாலும் எழுதலாமென்று'!
பூங்காவிற்கு புரியவில்லை,
'கவிதை வாசித்தது அவளா, இல்லை
கவிதை வாசித்தது அவளையா' என்று!

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

யாவும் நிஜம் ‍- காதலர்களுக்கு..!

2
அவளும் நானும்...!




முதல் பார்வை, முதல் வார்த்தை, முதல் ஸ்பரிஷம், முதல் கோபம்.........
அந்த முதல் தருணங்களின் தவிப்புகளையும், தத்தளிப்புகளையும் கோர்த்தெடுத்தால் 'பேரரசு' கூட காதல் படமொன்று எடுத்துவிடலாம்!

இன்றோ நொடிக்கு நொடி காதல் தான்.
நெருங்கி நெருங்கி நொறுங்கிவிடுகின்றோம்.
இரகசியங்கள் எங்கள் நெருக்கத்தில் சிக்கி செத்துபோகின்றன.
 'MEMORY CHIP'களை 'MESSAGE'களே நிரப்பிகின்றன.
ஊடலின் பொய்க்கோபங்கள் கூடலின் கண்ணீரில் சாயம்போகின்றன.
தோல்வித்துயர் அவள் மடியின் இதத்தில் தொலைந்துப்போகும்; வெற்றிக்களிப்போ அவள் உதட்டுச்சூட்டில் இரட்டிப்பாகும்!
விடுமுறை தினங்களில் தான் எங்களுக்கு முழு நாள் வேலை-காதல் அலுவலகத்தில்! 
விடிய விடிய தேடுகிறோம் 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா....' என்று!
எங்கள் அரட்டையில் வைகைப்புயலும் சரி, வெள்ளைமாளிகையும் சரி, எதுவும் தப்பிவிட முடியாது!
 A.R ரஹ்மானுக்கெல்லாம் நாங்கள் பல தடவை ஆஸ்கார் கொடுத்தாயிற்று.
எங்கள் கனவுகளின் 'டூயட்'டுகளை வைரமுத்துதான் எழுதி த‌ருகின்றார்.
அவளும் என்னைப் போலவே 'அஞ்சல....'வையும் ரசித்திடுவாள், 'அனல் மேலே பனித்துளி..'யையும் ரசித்திடுவாள்.
அவளது தந்தை எப்போதோ எனக்கு 'UNCLE' ஆகிவிட்டார்; எனது வீட்டுச்சமையலிலும் அடிக்கடி அவள் கைப்பக்குவம்!
சில்மிஷங்கள் சில ....ஓ... நேரமாகிவிட்டது. காத்துக்கிடப்பாள் அவள் -காதல் அலுவலகத்தில்...!

யாவும் கற்பனை- (என்னைப்போல்) கடலை மட்டும் போடுபவர்களுக்கு; யாவும் நிஜம்‍- காதலர்களுக்கு...!
ஆனாலும் கற்பனையில் கூட நன்றாகத்தான் இ(னி)ருக்கின்றது-காதல்..! 











திங்கள், பிப்ரவரி 01, 2010

ஆயிரத்தில் ஒருவன்‍ - புரிந்தவையும், புரியாதவையும்.

2
கொஞ்சம்(...?) தாமதான பதிவு. அனேகமாக ஆயிரத்தில் ஒருவனைப்பற்றி கடைசியாக வரும் பதிவாகக்கூட இருக்கலாம். ஏற்கனவே பல விமர்சகர்களும்  தொலைக்காட்சி சேனல்களும் படத்தை அக்கு வேர், ஆணி வேராக பிரித்து மேய்ந்து விட்டார்கள். அவர்கள் அளவிற்கு நான் 'சிந்தனை வாதி'யாக இல்லாவிட்டாலும், ஒரு சராசரி தமிழ்த்திரைப்பட ரசிகன் என்றவகையில் இத்திரைப்படத்தில் எனக்குப் புரிந்தவையும், புரியாதவையும் இதோ.....

புரிந்தவை
  • தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு திரைப்படம் 'புதுசு கண்ணாப் புதுசு'!.
  • தமிழிலும் இனி Gladiator, Pirates of the Carribean, National Treasure போன்ற படங்களுக்கு ஒப்பான படங்கள் வருமாக இருந்தால் அவ‌ற்றிற்கு இப்படம் ஒரு தொடக்கம்.
  • 'புதுப்பேட்டை' தோல்வியால் காதல் கதைக்குத்தான்  லாயக்கு என முத்திரைக்குத்தப்பட்ட செல்வராகவன், அந்தப்பெயரை உடைத்தெறிந்துள்ளார்.
  • படத்தில் சில இடங்களில் தவிர்த்திருக்கக்கூடிய லாஜிக் ஓட்டைகள். 
முக்கியமாக பிற்பாதியில் ஆண்ட்ரியா, பிரதாப்பொத்தனின் பாத்திரப்படைப்பு மற்றும் விமானத்தில் வந்திறங்கும் வீரர்கள், ஆயுதங்கள்.
  • ரீமாசென் என்ற ஒரு சிறந்த நடிகையை இவ்வளவு காலமும் தமிழ் சினிமா வீணடித்துவிட்டது. 
படத்தில் கார்த்தி, பார்த்திபன் இருவரும் கதாபாத்திரங்களாகவே மாறி உள்ளார்ந்தமான நடிப்பை வெளிப்படித்தியிருந்தாலும் அவர்களையும்  மீறி ரீமாசென் ஒரு கலக்கு கலக்கியிருக்கின்றார் என்றே சொல்லவேண்டும்.  ததும்பும் இளமையில் (அம்மணிக்கு '30'தாம், பக்கத்தில் ஒருவர் சொன்னார். அப்படியா என‌ விசாரித்தால், வயசாம்...! ) அவர் போடும் ஆட்டமாகட்டும், சண்டையாகட்டும், முற்பாதியில் கார்த்தி, பிற்பாதியில் பார்த்தி என இருவருடனும் மல்லுக்கு நிற்பதாகட்டும் அம்மணி அசத்தியுள்ளார். அதிலும் பிற்பாதியில் பார்த்திபனுடனான காட்சிகளில் ஏளனம் கலந்த கோபம் , த‌ந்திரம் கலந்த தாபம் என பல பரிமாணங்கள். இவ்வளவு காலமும் இப்படி ஒரு ரீமாசென்னை நான் பார்த்ததில்லை. Hats off to Reema and Thanks to Selvaragavan.

  • சோழ மன்னனின் கதாப்பாத்திரத்தில் முன்பு பார்த்திபனுக்கு பதிலாக தனுஷ் நடிப்பதாக இருந்ததாம். நல்ல வேளை, யார் செய்த புண்ணியமோ அப்படி எதுவும் நடக்கவில்லை.
  •  இசை, ஒளிப்பதிவு, பாடல் வரிகள்  உட்பட‌ விருது கொடுக்கவேண்டிய அம்சங்கள் படத்தில் ஏராளம்.
'உளியின் ஓசை' போன்ற 'தரமான' படங்கள் எதுவும் இந்த வருடம் வெளிவராம‌லிருந்தால் கிடைத்தாலும் கிடைக்கலாம். முக்கியமாக இசை- முற்பாதிக்கும், பிற்பாதிக்கும்  காட்டப்பட்டிருக்கும் அந்த வித்தியாசத்திற்காகவே.
  • பிற்பாதிக்கு (நம்ம)தமிழ்ல்ல  உபதலைப்பு போட்டிருக்கலாம்.
அட சீரியஸாத்தாங்க..! பிற்பாதியில் பல சம்பாஷணைகளின் சாராம்சம் விளங்கினாலும் பல சொற்களின் அர்த்தம் என் தமிழ்ப்புலமைக்கு(......?) எட்டவேயில்லை. ஆனாலும் அந்த தமிழ்ச்செறிவும், உச்சரிப்புகளும் உள்ளுக்குள் ஒரு இன‌ம்புரியாத சிலிர்ப்பை ஏற்படுத்துவது அவற்றின் வெற்றி.

புரியாதவை.
  • நான் பார்த்த படம், முழுதான படமா அல்லது நீளம் காரணமாக சில காட்சிகள் வெட்டுப்பட்ட படமா?
பலர் விமர்சித்திருந்த ரீமாசென் சம்பந்தப்பட்ட‌ காட்சிகள்  இருக்கவில்லை, ஆனால் 'நெல்லாடிய நிலமெங்கே..' பாடல் இருந்தது (நீளம் காரணமாக இந்தப்பாடல் தூக்கப்பட்டிருந்ததாக‌ அறிந்தேன்).
  • பிற்பாதியின் சம்பாஷணைகளில் இடம்பெறும் பல 'தமிழ்'ச்சொற்கள்.
  • இந்த சொற்களைத் தவிர, பிற்பாதி முழுதுமே புரியவேயில்லை என்று கூறுபவர்களுக்கு அப்படி என்ன புரியவில்லை என்பது.
  • ஹிட்டான பல சராசரிப்படங்ளின் லாஜிக் மீறல்களை சல்லடைக்கண்களில் பார்த்துவிட்டு 'ஆஹா..ஓஹோ' என்றுவிட்டு, இப்படியான ஒரு தமிழ்ப்படத்தின் லாஜிக் மீறல்களை அதெ கண்களில் விள‌க்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பதோடு அதையே தூக்கிப்பிடித்துக்கொண்டு  விமர்சிப்போரின் நோக்கம்.
  • Gladiator, Pirates of the Caribbean, National Treasure போன்ற படங்கள் ஹாலிவூட்டில் வரும்போது இப்படியான படங்கள் தமிழிலும் வராதா? என வெளிப்படையாக‌வே ஏங்கிவிட்டு , அப்படியான முயற்சிகளுக்கு வித்திடும் இந்த மாதிரியான ஒரு படத்தின் நிறைகளை விட்டுவிட்டு, நானும் ஒரு குறைக்கண்டு பிடித்துவிட்டேன் என மார்தட்டிக்கொள்ளும் சில விமர்சகர்களின் அந்த அதிமேதாவித்தனத்தின் நோக்கம்.
  • (ஊடக தர்மத்துடன் தொழிற்பட வேண்டிய‌)  தொலைக்காட்சி சேனல்களில் சில‌, இந்த படத்தை பாடாய்ப்படுத்துவதன் பின்னணி.
சமீபத்தில் ஒரு சேனலின் தரவரிசையில் ஆயிரத்தில் ஒருவன்‍‍ நான்காவதாம். முதலாவது‍‍ ஆதவனாம் (நூறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருப்பாதாலாம்). படத்தின் பாடல்களுக்கும் இதே நிலைமை. கொடுமை என்னவென்றால் கந்தக்கோட்டை படப்பாடல்கள் கூட முந்திக்கொண்டு நிற்பதுதான். அது சரி, காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சாகும்போது கலைஞருக்கு....?

இதையும் சேத்துக்குங்கோ.....

'ஆயிரத்தில் ஒருவன்‍ பகுதி II' கதை ரெடியாக இருக்கிறதாம். கட்டாயம் அதுவும் வெளிவருமாம். (சில அறிவு ஜீவிகளின் ஒருதலைப்பட்சமான‌  விமர்சனங்களால் இந்த முயற்சியை செல்வராகவன் கைவிட்டு விடாமல்  இருந்தால் சரி.)

சமீபத்தில் விஜய் டீ.வியில் ஆயிரத்தில் ஒருவன் அலசல் ஒன்று  இடம்பெற்றது. சுவாரஷ்யமான அந்த உரையாடலில் செல்வராகவன், கார்த்தி, பார்த்திபன், 'நீயா, நானா' கோபி நாத் மற்றும் ரசிகர்கள் கலந்துக்கொண்டனர். இதில் படத்தின் குறை, நிறைகள் பற்றி அலசப்பட்டுக்கொண்டிருந்தபோது கம்பியூட்டர் கிராபிக்ஸ் பற்றிய கதை வந்தது. செல்வராகவன், 'கார்த்தி உண்மையில் கையில் பிடித்தது பாம்ப‌ல்ல, கட்டையைத்தான்' எனறவுடன் கார்த்தி முகத்தில் ஒரு வெட்கம் கலந்த ஏமாற்றம். அவ‌ரும் உடனே தான் பாம்பை பிடிப்பதற்கு தயாராகத்தான் இருந்ததாகவும், செல்வா தான் வேணாமென்று கூறியதாகவும் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுக் கூற அது வரை அமைதியாக இருந்த பார்த்திபன் ஒரு நச் கமென்ட் அடித்தார்
' கார்த்தி இரண்டு பாம்பை பிடித்த‌து உண்மைதான். ஒன்று ரீமாசென், மற்றது ஆண்ட்ரியா'.
இது தான் பார்த்திபன் குசும்பு.

இதோ அந்த நிகழ்ச்சி....
















வியாழன், ஜனவரி 21, 2010

பாட்டு செம‌ சுவீட்டு - மெல்லினமே, மெல்லினமே...

0
என்னதான் குத்துப்பாடல்களும் தத்துவப்பாடல்களும் பட்டி, தொட்டி எங்கும் பட்டையை கிளப்பினாலும் மெல்லிய காதல் பாடல்கள் தான் நம் மனதில் ஏறி அமர்ந்துக் கொள்ளுகின்றன . அதிலும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பல மெல்லிய காதல் பாடல்களை கேட்கும்போதே நான் 'என் வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லாத அந்த உருண்டை உருள' உணர்ந்திருக்கின்றேன்  ( 'யூத்'தாக்கும்   ஹி..ஹி.. ).

அப்படியான பாடல்களில் ஒன்றுதான் ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மெல்லினமே, மெல்லினமே....' என்ற பாடல். ஒருதலைக்காதலின் சுகம், சோகம் இரண்டையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடல்கள் மிகக்குறைவு.  என்னதான் இந்தப்பாடல் சோகப்பாடல்களின் வரிசையில் வராவிட்டாலும், பாடலில் அங்கங்கே இழையோடும் சோகத்தில் கவிஞர் வாழ்ந்திருக்கின்றார்.



'மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்...'

மெல்லினமே என்று தமிழையும், மென்மையையும் கலந்துக்கட்டி காதலியை அழைக்கும் அந்த முதல் வரி, 'வைரமுத்து டச்'!


'என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி...'
காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சாகும்போது, காதலனுக்கு? அடுத்த வரியிலேயே அந்த உயரத்தை அளந்தும் கொடுக்கின்றார்.
'அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும்'
பூக்கும், பார்க்கும் - பொருளில் மட்டுமில்லை, வார்த்தைகளிலும்  விளையாடுகிறார் கவிஞர்.

'நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்...'

ஏக்கமா, வியப்பா? காதலில் விழுந்த அந்த நொடியில் புதிதாய் பிறக்கின்றான், இருபத்தைந்து வயதை இழக்கின்றான்.
இழுத்தாய், அடைத்தாய்-அந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது.

'வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி'

புயலிலும் சாயாத வேர்கள், பட்டாம் பூச்சியால் சாய்ந்ததாக தன் ஏக்கத்தையும், வியப்பையும் தொடர்கிறான் காதலன். ஏன் வேர்? வேரில்லாமல் வேறில்லையே...வேரையே சாய்த்துவிட்டாள். இனி என்ன செய்வது!

'எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி'

ஒவ்வொரு காதலனுக்கும் காதலை சொல்வதில் உள்ள தயக்கத்தையும் இயலாமையயும்  உணர்த்தும் வரிகள்.

'கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக'

கனவுப் பூவே....உண்மை தான். ஒருதலை காதலனுக்கு அவன் காதலி 'கனவுப்பூ'தானே, நேரில் என்ன செய்ய முடியும்?
காதலை சொல்ல அவனால் முடியவில்லை. அவளாக வரவேண்டுமாம், இதயத்தை பரிமாறிக்கொள்ள!

'மண்ணைச்சேரும் முன்னே அடைமழைக்கு லட்சியம் இல்லை
மண்ணைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..'

ஆஹா, இப்படித்தானே இருக்க வேண்டும் உவமை. எவ்வளவு எளிமையான வரிகள். குழ‌ந்தைக்கும் புரியும்.
'முன்னே', 'பின்னே' என  வார்த்தைக் கோர்வைகள் காதில் தேனாக பாய்கின்றன.

'வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்'

காதல் ஏற்படுத்தும் மாற்றத்தையும், மென்மையையும் இதை விடவும் அழகாக கூறி விட முடியுமா, இரண்டே வரிகளில்?

கடைசி வரிகள் தான் இந்தப் பாடலின் 'MASTERPIECE'.
'பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதுமில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறை
வதும் இல்லை '
உவமையின் உச்சம். நான் முன்பே கூறியது போல் இந்த வரிகளின் பின்னே இழையோடும் சோகம், நம் மனதிலும் குடிகொள்கின்றது. இதுவே இந்த வரிகளின் வெற்றி.

பாடல் வரிகளின் தொடர்ச்சித்தன்மையில் ஒரு குட்டிக்கதையையே கவிஞர் சொல்லிமுடித்திருப்பதை உணரலாம், முடிவு உட்பட‌ (படக்கதையும் கிட்டத்தட்ட அதுவே). பாடலை முழுமையாக கேட்டு முடிக்கும் போது கடற்கரை வெயிலோடு, ஈரமான கடற்காற்றையும் சேர்த்து அனுபவித்தது போன்றதொரு உணர்வு. உங்களுக்கும் அப்படித்தானே...?

இதையும் சேத்துக்குங்கோ...
  • இந்த‌ பாடல் எனக்கு பிடித்தமைக்கு வரிகளை சிதைக்காத, மறைக்காத இசை வழங்கியிருந்த‌ மணிசர்மாவும், கவிஞரோடு சேர்ந்து வாழ்ந்திருந்த பாடகர் ஹரிஸ் ராகவேந்திராவும் கூட முக்கிய காரணங்கள்.
  • பாடலுக்கான காட்சிப்படுத்தலும் கூட வரிகளுக்கேற்ப‌ இருந்தது. ஒளிப்பதிவு, லொகேஷன் மற்றும் ரிச்சா பல்லோட்- அனைத்தும் சிறப்பாக இருந்தது. முக்கியமாக விஜய். அந்த‌ ஆர்ப்பாட்டமில்லாத நடன அசைவுகளும், அவருக்கேயுரிய குறும்பும், குழந்தைத்தனமும் கலந்த முகபாவனைகளும் -ஒரு  ஹைக்கூ. (இப்ப‌ எங்க சார் போய்த்தொலஞ்சீங்க?)
  • இது என்னதான் அருமையான பாடலாக இருந்தபோதும் படத்தில் பெரிய‌ ஹிட் ஆனது என்னவோ 'சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன்' என்ற குத்துப் பாடல் தான். இதற்காக சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கூட 'இங்கே' கவலைப்பட்டிருந்தார்.

இதோ பாடல்.....







செவ்வாய், ஜனவரி 12, 2010

உன்னைப்போல் ஒருவனும், வேட்டைக்காரனும்!

5

கூடையிலிருந்து நழுவி விழுந்த தக்காளியை பொறுக்கிக்கொண்டிருந்த உன்னைப் போல் ஒருவன் குதிரை கனைக்கும் சத்தத்தைக்கேட்டு தாடியை சொறிந்துக்கொண்டே நிமிர,  இடுப்பில் ஒரு கை, கௌபாய் தொப்பி, பட்டன் தைக்காத சட்டை என வித்தியாசமான கெட்டப்பில் மணிக்கு 100 km வேகத்தில் குதிரையை,  இல்லையில்லை குதிரையில் யாரையோ விரட்டிக்கொண்டு வந்தவர்.......ஆங் அவரே தான்,  வேட்டைக்காரன்!

'உ.போ.ஒ' ஐ பார்த்தவுடன் தன் முயற்சியை கைவிட்டுவிட்டு 'வே.கா', குதிரையிலிருந்து கீழே குதிக்க, தப்பினோம், பிழைத்தோம் என குதிரை கதறிக்கொண்டே  ஓடி மறைகிறது.

வே.கா: வணக்கமுங்கண்ணா....

உ.போ.ஒ: ஆ.. நீங்களா, என்ன தோப்பியெல்லாம் வச்சு , பூப்போட்ட சட்டையெல்லாம் போட்டு அடையாளமே தெரியல.

வே.கா: இது தானுங்கண்ணா என்னோட புது கெட்டப்பு.
படம் பிச்சுக்கிட்டு ஓடுதே...இன்னும் பாக்கலீங்களாண்ணா?

உ.போ.ஒ: (சன் டி.விக்காரன் தொல்லதான் தாங்க முடியலன்னு வெளிய வந்தா, இங்கயுமா என முனகிக்கொண்டே) பார்க்கத்தான் போனேன். ஆனா பாதிலேயெ எழும்பி வந்துட்டேன். அதான் நீங்க போலிசாக ஆசைப்படுறதா யாரோ படத்துல சொல்லுவாங்களே, எங்க அப்படி எதும் நடந்துறப்போகுதோங்குற பயந்துல எழும்பிவந்துடேன்.

வே.கா: (சற்று கடுப்பாக) அது பாதி இல்லைங்கண்ணா, ஆரம்பமே அதான். நீங்களாவது பரவால்லைங்கண்ணா. நான் உ.போ.ஒ பார்த்து பாதிலயே தூங்கிட்டேன். ஒரு குத்து பாட்டு இல்ல, ஒரு டூயட் இல்ல...
அப்படி என்ன.....என்ன...என்ன சொல்ல வாறீங்க?
என்ன பாருங்க, என்னா பைட்டு, என்னா டான்ஸ்....அதுல பாருங்கண்ணா டைரக்டர் என் 'ச‌ன்'னும் என்னோட சேந்து நடிச்சா, இல்லல்ல‌ ஆடுனா 'நல்லாருக்குன்னு 'feel' பண்ணுனார். நானும் அடுத்த நாளே 'ச‌ன்'னோட போய் நிக்க என் கமிட்மென்ட‌ பாத்து அப்டியே ஆடி...ஆ..டி போய்ட்டாருங்கண்ணா...

கேட்டுக்கோண்டிருந்த உ.போ.ஒ  வழிந்தோடிய‌ கண்ணீரை   துப்பாக்கியாலே துடைக்க,  வே.கா விடுவதாயில்லை

வே.கா: அதுல பாருங்கண்ணா, ட்ரயின்ல அனுஷ்காவோட லவ் சீன் ஒன்னு வச்சிருக்கோம், யூத் மனசையெல்லாம் அப்படியே டச் பண்ணிரும்...

உ.போ.ஒ உம் ஏதோ 'முத்த‌' சமாச்சாரமோ என 'அனுஷ்காவுக்கேவா' என்பது போல் கண்ணாடியை துடைத்துக் கொண்டு பார்க்க‌.

டிரயின்ல வச்சு அப்படியே அவ்ங்க வளையல திருடி, அத அவங்க ஞாபகச்சின்னமா வச்சிருக்கேன், ஆனா அத அவங்க கண்டுப்பிடுச்சுறாங்க. சீன் ரொம்ப வித்தியாசாமா இருக்கதா சன் டி.வில சொல்றாங்க‌.  அநியாயத்தக் கண்டா வேட்டைக்காரன், அனுஷ்காவக் கண்டா சேட்டைக்காரன்னு ஒரு பன்ச் வச்சிருக்கணும் . Just misssuங்கண்ணா.

உ.போ.ஒஅதற்கு மேல் தாங்க‌ முடியாமல்,

நான் ஒரு காமன் மேனாக சொல்றேன், இந்த வேட்டையும் சேட்டையும் எத்தனை நாளைக்கு தமிழர் ரசிப்பாங்க‌? தமிழர் எல்லோரும் விரும்புற‌து உலகத்தரம். இதயே தான் கலைஞர் அய்யாவும் கடைசியா அவருக்கு நடந்த பாராட்டு விழாவுல சொன்னாரு.உலகத்தரம்னா டான்ஸும் பைட்டும் தேவ‌ல்ல.  முதல்ல லாஜிக் இருக்கணும். மாறணும் எல்லாம் மாறணும்.

தொடங்கிட்டார்ரா இவரு, உலகத்தரம், உலக்கைத்தரம், லாஜிக், மேஜிக்கினுக்கிட்டு என முணுமுணுத்துக்கொண்டே வே.கா,

'அண்ணா, அங்க மட்டும் என்னங்கண்ணா லாஜிக் வாழுது. ஒரு தக்காளியக்கூட‌ விடாம பொறுக்குவீங்களாம். ஆனா லப் டாப்பு, மொபைல் எல்லாத்தயும் போட்டு கொளுத்துவிங்களாம். நல்ல காமன் மேனுங்கண்ணா நீங்க.'

உ.போ.ஒ:  நா என்ன சொல்றேன்னா, காதுல இந்த மாதிரி சின்ன சின்னதா பூ சுத்தலாம், ஆனா உங்கள மாதிரி புடலங்காய சுத்தக்கூடாது. காதும் தாங்காது, கண்ணும் தாங்காது.
இப்ப பாருங்க, சும்மா இருந்த நிறைய பேர் உங்களால கண்ணுக் கெட்டுப்போய் விமர்சனம் எழுதுறேங்கற பேரில எழுதி, எழுதி இப்ப தூண், துரும்பு எல்லாத்திலயும் நீங்கத்தான் தெரியுறீங்க‌. கடைசியா விஜயகாந்த் சோன்ன  புள்ளி விபரத்துல...
உங்களோட SMS ஜோக்‍ 189
உங்களோட E-MAIL ஜோக்‍ 216
வே.கா விமர்சனம் 1116, இதுல 1000த்துக்கு மேல நையாண்டி விமர்சனம்.
இதெல்லாம் தேவையா? இப்படியே போனா நான் காமன் மேன் ஆன மாதிரி நீங்க காமடி மேன் ஆகிடுவிங்க.

வே.கா: அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜங்கண்ணா. உங்களப்பத்தி கூடத்தான் டெல்லி கணேஸ் மாதிரி ஒருத்தர் நடிக்கவேண்டிய 'ரோல்'ல‌ நீங்க நடிச்சுட்டதா யாரோ ஒரு ஞானி நக்கலா சொல்லிருந்தாரே. வாசிக்கலயாங்கண்ணா...

உ.போ.ஒ: நான் விமர்சனங்களை படிப்பவன், விஷமத்தனங்களை அல்ல; விமர்சகர்க‌ளை மதிப்பவன், விஷமிகளை அல்ல. ஞானி என்பவன் முற்றுமுணர்ந்தவன். தன்னைத்தானே ஞானி என்று..... 

அப்போது அங்கே வந்த ரசிகர் கூட்டம் உ.போ.ஒ ஐ அடையாளம் கண்டு சூழ்ந்துக்கொள்ள, கண்டுக்கப்படாததால்  கடுப்பாகிய வே.கா அவருக்கேயுரிய பாணியில்
'ஹே, சைலன்ஸ்... பேசிக்கிட்டுருக்கோமுல்ல'.
என அலற, ரசிகர் கூட்டம் சிதறி ஓடுகிறது, காதில் வடிந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டே.

கண்களில் கொலைவெறியுடன் நின்ற வே.கா பார்த்து பயந்து சற்று தள்ளி நின்று உ.போ.ஒ தொடர்கிறார்...
'சரி அத விடுவோம். அடுத்ததா என்னப் பண்ணப்போறீங்க?'

வே.கா: அப்டி கேளுங்கண்ணா, அடுத்து என்னோட அவதாரம் சுறா...சண்டன்னு வந்தா சுறா; சாந்தமானா புறா. இது எப்டி இருக்கு
என கையையும், காலையும் உதறி ஏதோ சேய்து காட்ட‌...

உ.போ.ஒ: சுறாவோ, புறாவோ... ஒன்னு மட்டும் நிச்சயம், இப்பிடியே போனா உங்க ரெண்டு படத்தை வச்சு 'குறைந்தபட்சம் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க'ன்னு போட்டியே நடத்திடுவாங்க. .

வே.கா: அதுக்காக‌த்தாங்கண்ணா அதுல ரொம்ப வித்தியாசமா வழமையான‌ 3 நாள் தாடிய, 5 நாள் தாடியாக்கப்போறேன். அதோட சேர்ட்டே போடாம‌ வெறும் பனியனோட வரப்போறேன். பார்க்கிறவனெல்லாம் அப்படியே அதிரப்போறான். சுறாவக் கண்டு கை, கால் மட்டும் இல்ல 'த‌ல'யே நடுங்கப்போகுதுங்கண்ணா.

என்று சொல்லிமுடிக்கவும் உ.போ.ஒ துப்பாக்கி வெடிக்கவும் சரியாக இருந்தது.

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உ.போ.ஒ சரிந்து விழுந்த பிறகும் கூட‌ வே.கா  பன்ச் தொடர்கிறது. 

 'வேட்டைக்காரன் அடிச்சும் கொல்லுவான், கதச்சும் கொல்லுவான். அடுத்தது யாரு, வேற.....வேற........... '

சத்தத்தை கேட்டு மக்களோடு  மக்களாக‌ நாய், பூனைகளும் சிதறி ஓட, பின்னால் ஒலிக்கிறது.

'ஏ...ஓடு, ஓடு, ஓடு, ஓடு  வேட்டக்காரன் வாற‌தப் பாத்து...'

பி.கு: உ.போ.ஒ, வே.கா இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு என் மனதில் தோன்றிய எண்ணங்க‌ளின் பிரதிபலிப்பே இந்த சந்திப்பு. வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. முக்கியமாக மற்றவர்களைப்போல் 'வே.கா' ஐ நக்கலடிக்கும் நோக்கம் இல்லவே இல்லைங்கண்ணா.  ஹி..ஹி...!







Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner