வியாழன், ஜனவரி 21, 2010

பாட்டு செம‌ சுவீட்டு - மெல்லினமே, மெல்லினமே...

0
என்னதான் குத்துப்பாடல்களும் தத்துவப்பாடல்களும் பட்டி, தொட்டி எங்கும் பட்டையை கிளப்பினாலும் மெல்லிய காதல் பாடல்கள் தான் நம் மனதில் ஏறி அமர்ந்துக் கொள்ளுகின்றன . அதிலும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பல மெல்லிய காதல் பாடல்களை கேட்கும்போதே நான் 'என் வயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லாத அந்த உருண்டை உருள' உணர்ந்திருக்கின்றேன்  ( 'யூத்'தாக்கும்   ஹி..ஹி.. ).

அப்படியான பாடல்களில் ஒன்றுதான் ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மெல்லினமே, மெல்லினமே....' என்ற பாடல். ஒருதலைக்காதலின் சுகம், சோகம் இரண்டையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடல்கள் மிகக்குறைவு.  என்னதான் இந்தப்பாடல் சோகப்பாடல்களின் வரிசையில் வராவிட்டாலும், பாடலில் அங்கங்கே இழையோடும் சோகத்தில் கவிஞர் வாழ்ந்திருக்கின்றார்.



'மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்...'

மெல்லினமே என்று தமிழையும், மென்மையையும் கலந்துக்கட்டி காதலியை அழைக்கும் அந்த முதல் வரி, 'வைரமுத்து டச்'!


'என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி...'
காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சாகும்போது, காதலனுக்கு? அடுத்த வரியிலேயே அந்த உயரத்தை அளந்தும் கொடுக்கின்றார்.
'அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும்'
பூக்கும், பார்க்கும் - பொருளில் மட்டுமில்லை, வார்த்தைகளிலும்  விளையாடுகிறார் கவிஞர்.

'நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்...'

ஏக்கமா, வியப்பா? காதலில் விழுந்த அந்த நொடியில் புதிதாய் பிறக்கின்றான், இருபத்தைந்து வயதை இழக்கின்றான்.
இழுத்தாய், அடைத்தாய்-அந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது.

'வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி'

புயலிலும் சாயாத வேர்கள், பட்டாம் பூச்சியால் சாய்ந்ததாக தன் ஏக்கத்தையும், வியப்பையும் தொடர்கிறான் காதலன். ஏன் வேர்? வேரில்லாமல் வேறில்லையே...வேரையே சாய்த்துவிட்டாள். இனி என்ன செய்வது!

'எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி'

ஒவ்வொரு காதலனுக்கும் காதலை சொல்வதில் உள்ள தயக்கத்தையும் இயலாமையயும்  உணர்த்தும் வரிகள்.

'கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக'

கனவுப் பூவே....உண்மை தான். ஒருதலை காதலனுக்கு அவன் காதலி 'கனவுப்பூ'தானே, நேரில் என்ன செய்ய முடியும்?
காதலை சொல்ல அவனால் முடியவில்லை. அவளாக வரவேண்டுமாம், இதயத்தை பரிமாறிக்கொள்ள!

'மண்ணைச்சேரும் முன்னே அடைமழைக்கு லட்சியம் இல்லை
மண்ணைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..'

ஆஹா, இப்படித்தானே இருக்க வேண்டும் உவமை. எவ்வளவு எளிமையான வரிகள். குழ‌ந்தைக்கும் புரியும்.
'முன்னே', 'பின்னே' என  வார்த்தைக் கோர்வைகள் காதில் தேனாக பாய்கின்றன.

'வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்'

காதல் ஏற்படுத்தும் மாற்றத்தையும், மென்மையையும் இதை விடவும் அழகாக கூறி விட முடியுமா, இரண்டே வரிகளில்?

கடைசி வரிகள் தான் இந்தப் பாடலின் 'MASTERPIECE'.
'பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதுமில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறை
வதும் இல்லை '
உவமையின் உச்சம். நான் முன்பே கூறியது போல் இந்த வரிகளின் பின்னே இழையோடும் சோகம், நம் மனதிலும் குடிகொள்கின்றது. இதுவே இந்த வரிகளின் வெற்றி.

பாடல் வரிகளின் தொடர்ச்சித்தன்மையில் ஒரு குட்டிக்கதையையே கவிஞர் சொல்லிமுடித்திருப்பதை உணரலாம், முடிவு உட்பட‌ (படக்கதையும் கிட்டத்தட்ட அதுவே). பாடலை முழுமையாக கேட்டு முடிக்கும் போது கடற்கரை வெயிலோடு, ஈரமான கடற்காற்றையும் சேர்த்து அனுபவித்தது போன்றதொரு உணர்வு. உங்களுக்கும் அப்படித்தானே...?

இதையும் சேத்துக்குங்கோ...
  • இந்த‌ பாடல் எனக்கு பிடித்தமைக்கு வரிகளை சிதைக்காத, மறைக்காத இசை வழங்கியிருந்த‌ மணிசர்மாவும், கவிஞரோடு சேர்ந்து வாழ்ந்திருந்த பாடகர் ஹரிஸ் ராகவேந்திராவும் கூட முக்கிய காரணங்கள்.
  • பாடலுக்கான காட்சிப்படுத்தலும் கூட வரிகளுக்கேற்ப‌ இருந்தது. ஒளிப்பதிவு, லொகேஷன் மற்றும் ரிச்சா பல்லோட்- அனைத்தும் சிறப்பாக இருந்தது. முக்கியமாக விஜய். அந்த‌ ஆர்ப்பாட்டமில்லாத நடன அசைவுகளும், அவருக்கேயுரிய குறும்பும், குழந்தைத்தனமும் கலந்த முகபாவனைகளும் -ஒரு  ஹைக்கூ. (இப்ப‌ எங்க சார் போய்த்தொலஞ்சீங்க?)
  • இது என்னதான் அருமையான பாடலாக இருந்தபோதும் படத்தில் பெரிய‌ ஹிட் ஆனது என்னவோ 'சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன்' என்ற குத்துப் பாடல் தான். இதற்காக சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கூட 'இங்கே' கவலைப்பட்டிருந்தார்.

இதோ பாடல்.....







No Response to "பாட்டு செம‌ சுவீட்டு - மெல்லினமே, மெல்லினமே..."

கருத்துரையிடுக

அவசியம் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள், பின்னூட்டங்களாக‌!

Related Posts with Thumbnails
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner